ஹனுமன் கடவுளின் அம்சமாக இருந்தாலும் அவர் சிறந்த ஸ்ரீ ராமரின் பக்தராகவே கை கூப்பி எப்பொழுதும் காட்சி கொடுக்கின்றார்.
இவரிடம் வேண்டி வணங்கினால் எந்த ஒரு விடயமும் தோல்வி அடைவதே கிடையாது.
அனைத்திலும் ஜெயம் உண்டாக சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடலாம்.
வழிபாடு
எந்த ஒரு மங்களகரமான விடயத்திற்கும் வெற்றிலை, பூ, பாக்கு, பழம் போன்றவற்றை வைத்து வழிபாடுகள் செய்வது உண்டு.
மங்களம் தரும் இந்த வெற்றிலையை மாலையாக கோர்த்து அதிகம் அணிவிப்பது அனுமனுக்கு என்று கூறப்படுகிறது.
சீதை அனுமனை பூவிற்கு பதில் வெற்றிலையால் ஆசிர்வாதம் செய்ததாலேயே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றப்படுகிறது என்று கூறப்படுகின்றது.
வெற்றிலை மாலை வழிபாடு
இவருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுபவர்களுக்கு எத்தகைய தோல்வியும் நெருங்குவதில்லை.
நாம் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என நினைத்து கொண்டு அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது விசேஷமானது என்று கூறப்படுகிறது.
அதே போல பாக்கு வைக்கும் பொழுது ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் பாக்கு வைக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
வழிபட உகந்த நாள்
எந்த ஒரு விஷயத்தில் நீங்கள் வெற்றியை அடைய வேண்டும் என்றாலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் வெற்றிலையை ஆஞ்சநேயரின் உயரத்திற்கு ஏற்ப மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும்.
இது போல தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வர வேண்டும்.
இப்படி வழிபட்டு வந்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். எந்த விதமான தடைகளும் இன்றி நீங்கள் வெற்றியை அடையலாம்.
வடை மாலை
ஆஞ்சநேயருக்கு வடை மாலை கூட சாற்றி வழிபடுவார்கள். சுப காரியங்களில் தடைகள் இருப்பவர்கள் ஆஞ்சநேயருக்கு வடைகளை மாலையாக கோர்த்து அணிவிக்கலாம்.
வடையை மாலையாக கோர்க்கும் பொழுதும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் கோர்க்காமல் இரட்டைப்படை எண்ணிக்கையில் கோர்த்து அணிவிக்க வேண்டும்.
ஓட்டை வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். ஸ்ரீ ராமஜெயம் என்னும் மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுதி மாலையாக கோர்த்தும் அணிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.